
பாலின சமத்துவம் பார் போற்றும் மகத்துவம் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
ஆணாகப் பெண்ணாக அவதரித்தோம் - சிலர்
அர்த்தநாரி என்றிங்கும் உருவெடுத்தோம்....
ஆணவனை உயர்வாகச் சித்தரித்தோம் - இந்த
அகிலத்தை அவனடியில் படையலிட்டோம்
பெண்ணவளைப் பேதையென்று சிறையிலிட்டோம் - அவள்
பெருமையினைக் காலடியில் புதைத்து வைத்தோம்.
பள்ளிக்குச் செல்வதற்குத் தடைகளிட்டோம் - அந்தப்
பாதையைத் தடுப்பதற்கு நெருப்பிலிட்டோம்
அடுப்பங்கரைத் தாழ்வாரம் எல்லையென்றோம் - அவள்
விருப்பங்களைத் தடுப்பதையே
கொள்கையென்றோம்
படி தாண்டிச் சென்றாலேப் பாவமென்றோம் - அந்தப்
பழைமையை உடைப்பதையே அவமானமென்றோம்
திருமணமே பெண் வாழ்வின் உச்சமென்றோம் - அதிலும்
மறுமணத்தை ஏனோ நாம் துச்சமென்றோம்..
இப்படியேப் பேசியிங்கு கூச்சலிட்டோம் - இறுதியாக
ஆறறிவை எப்படியோ உணர்ந்து கொண்டோம்.
அரசமைப்புச் சட்டமொன்றை எழுதி வைத்தோம் - அதில்
அனைவரும் சமமென்று எடுத்துரைத்தோம்
வேலைக்கு ஊதியத்தை நிர்ணயித்தோம் - அதிலும்
பாலின வேறுபாட்டைக் களையெடுத்தோம்
சொத்துரிமைச் சட்டமதை திருத்தம் செய்தோம் - அதில்
சொந்த மகளுக்கும் சமமான பங்கு என்றோம்
உள்ளாட்சித் தேர்தலிலும் நிற்க வைத்தோம் - அங்கு
முப்பத்து மூன்று சதம் பங்கு வைத்தோம்.
கல்வி முதல் வேலை வரை வாய்ப்பளித்தோம் - பெருங்
கனவுகளை வென்றெடுக்க வழியமைத்தோம்
சாதிக்கத் துடிப்பவர்க்குக் களம் கொடுப்போம் - நல்
சாதனைகள் புரிவதற்குக் கரம் கொடுப்போம்.
சமத்துவத்தை முழுமனதாய் முன்னெடுப்போம் - உண்மை
மகத்துவத்தை உணர்ந்திங்கு முடிவெடுப்போம்...
ஆளுக்குப் பாதியென்று அளவெடுத்துக் கொடுத்துவிட்டால் - இந்தப்
பாருக்குள் வந்திடுமா
பாகுபாடில்லா சமத்துவம்தான்..
வேருக்கு நீரைவிட்டால்
விருட்சம் தான் துளிர்த்திடுமே - கொடும்
வேற்றுமையைக் களையெடுத்தால் விண்ணோக்கி வளர்ந்திடுமே..
அடுத்தவர் எண்ணத்திற்கு
ஆள்மனதால் மதிப்பளிப்போம் - இந்த
அழகிய பயணத்திற்கு
அனைவருக்கும் சமவாய்ப்பளிப்போம்...
வாழ்த்துகளுடன் ,
கவிஞர் விஜயநேத்ரன்