பேருந்துப்பயணம் : வாழ்க்கைத் தத்துவத்தை அள்ளித் தெளிக்கும் அமுதசுரபி ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
எதிர்பாரா திருப்பங்களையும்,
எதிர்பார்க்கும் மாற்றங்களையும்,
எதிர்கொள்வதென்னவோ,
பேருந்துப் பயணங்களில்தான்...
அறியாத ஞானமெல்லாம்
அங்கேதான் கற்றிடலாம்...
தெரியாத விடயமெல்லாம்,
திரைகடலாய்ப் பார்த்திடலாம்...
வேற்றுமையில் ஒற்றுமையை
வழிநெடுகில் கண்டிடலாம்...
வியப்பையும், வெறுப்பையும்
ஒன்றாக பெற்றிடலாம்...
இயற்கையில் அழகெல்லாம்
இருவிழியில் ரசித்திடலாம்...
இதயத்தின் ஓரங்களில்,
காட்சியாய்ப் பதித்திடலாம்...
அமரும் இடமதனால்,
அனுபவங்கள் மாறிடலாம்...
தொடரும் பயணத்தில்,
வினாவிடை தொடர்ந்திடலாம்...
ஏறி இறங்கும்போது,
மாற்றங்கள் அது தரலாம்...
இடையிடையே பயணத்தில்,
ஏமாற்றங்களும் துணை வரலாம்..
பயணங்கள் பலவகைதான்..
பயணிகளும் பலவகைதான்..
மனதில் நிற்கின்ற
மாபெரும் காவியம் தான்...
அடித்துப் பிடித்து இடம்பிடிப்போம்,
அவசரப் பயணங்களில்..
மனித மூட்டைகளாகப் பயணிப்போம்
மூச்சுத்திணறி நெரிசலில்...
படிகளில் நின்றே பயணிப்போம்,
இருக்கை காலியாக இருந்தும்....
முகநூல் பதிவுகளாய் மகிழ்வோம்,
ஜன்னலோர இருக்கையில்...
கால்கடுக்க நின்றிருந்து,
களைப்பில் அமரும் போது,
கண்ணால் இடம் கேட்பார்,
கர்ப்பிணி பெண்ணும்,
வயோதிக முதியவரும்...
மறுக்க முடியாமல்,
அமரவும் முடியாமல்,
ஆழ்மனது மறுதலிக்கும்...
அடுத்த நொடி இடம் கொடுக்கும்....