காதல் பிறக்கும் நேரம் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
அன்றாட நிகழ்வினில் — அதுவொரு அதிசயம்...
என்றேனும் நடந்திடும் — எதிர்பாரா அனுபவம்...
மொட்டுகள் பூவாகும் — முகமறியா இரகசியம்....
இளம்பரிதி வெளிச்சத்தில் — முழுமதியாய்த் தேயும்....
இதயத்தின் ஓட்டத்தில் — வேகங்கள் கூடும்...
வாளேந்தும் வீரன் கூட — தாழ் பார்க்க நேரும்...
வாயாடிப் பெண்ணவளும் — வாய்மூடத் தோணும்....
வார்த்தைகள் விடுமுறையில் — வாராமல் போகும்...
நாவதிலே நர்த்தனங்கள் — தாண்டவங்கள் ஆடும்....
சொல்லாத வார்த்தையதை — சொல்லிடவே தோன்றும்...
சொல்லவந்த நேரமது — இழுபறியில் நீளும்...
சொல்லும் அந்த நொடி — சாவதனை வெல்லும்..
சொல்கின்ற அந்த நொடி வானிலையை மாற்றும்...
சொல்லிவிட்டு காத்திருக்க இடி முழக்கம் தோன்றும்.
உள்ளத்தில் புதியதொரு மாற்றங்கள் பிறக்கும்
உள்ளுக்குள் புதியவராய் பிறந்தவராய்த் தோன்றும்...
ஆம்...
காதலினால் புதியவராய் — பிறக்கின்ற நேரம்.....
அது....
காதலென்னும் கைக்குழந்தை பிரசவிக்கும் நேரம்....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்