அற்பமா? அற்புதமா??? - கவிஞர் விஜயநேத்ரன்
தேவையில்லாததென்று,
ஏதுமேயில்லை இந்தப் பூமியில்...
அதன் தேவையை
நாம் அறிந்திருக்கவில்லை;
அது மட்டுமே உண்மை...
பாலைவன மணலில்
பரிதவித்து நிற்பவனுக்கு,
பாற்கடல் அமிர்தமாகிறது..
ஒரு துளி நீரே.
அக்கினி வெயிலில்
அலைந்து திரிபவனுக்கு,
அதிசயம் புதையலாகிறது .....
மரக்கிளை நிழலே....
அடைமழை வெள்ளத்தில்,
நனைந்து நடுங்குபவனுக்கு,
புத்துயிர் அளிக்கிறது...
சிறு வெயிலே...
பசியென்னும் பிடியில்,
மயங்கிச் சரிபவனுக்கு,
கடவுளாய்த் தெரிவது...
கைப்பிடி உணவே...
இப்படியாக.,
அவரவர் தேவைகளே
தீர்மானிக்கின்றது
அந்தந்தப் பொருளின்
முக்கியத்துவத்தை...
ஒரே நிலையில்தான் இருக்கின்றன
ஒவ்வொரு பொருளும் இந்த பூமியில்...
மனிதரின் பார்வைகள் மாறுகின்றன,
மனிதரால் பார்வைகள் மாறுகின்றன...
தன்னை உயர்வாய் நினைத்து
கர்வம் கொள்வதுமில்லை,
தன்னைத் தாழ்வாய் நினைத்து
மனம் உடைவதுமில்லை;
எந்தவொரு பொருளும்...
நேற்று தேவைப்படாதது
இன்று அத்தியாவசியமாகிறது,
நாளை அதிசயமாகலாம்,
அடுத்த நாள் பொக்கிஷமாகலாம்...
நேற்று எல்லாமுமாயிருந்தது
இன்று தூக்கி எறியப்படுகிறது,
நாளை அற்பமாகலாம்,
அடுத்த நாள் குப்பையாகலாம்...
அற்பப் பொருளென்று எண்ணி
தூக்கியெறிகின்ற துரும்பும்,
அதிசயமாய் தோன்றும்
யாரோ ஒருவர்க்கு...
அதிசயமாய் பொத்திப் பாதுகாக்கும்
பொருளொன்று,
அற்பமாய் தோன்றலாம்
அதே மற்றொருவருக்கு...
தேவையில்லாததென்று,
ஏதுமேயில்லை இந்தப் பூமியில்...
அதன் தேவையை
நாம் அறிந்திருக்கவில்லை;
அது மட்டுமே உண்மை...
#சிந்தித்து_செயலாற்றுங்கள்
வாழ்த்துகளுடன்,
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்