#உறவென்னும்_ஆலமரம்
அன்னையும் தந்தையுமாய்
அருமை உடன்பிறப்புகளாய்,
தோள் தரும் தோழமையாய்,
துணை நிற்கும் சொந்தங்களாய்,
கரம் பிடித்த இணையராய்,
கண் விரும்பும் பிள்ளையராய்....
தினசரி வாழ்க்கையிதில்
மனந்தன்னில் நிறுத்துகிறோம்....
உறவென்னும் பெயரிட்டு
உலகத்தின் பார்வையிலே.....
இயற்கையாய்க் கிடைக்கிறது...
இவற்றில் பல....
இதயத்தால் இணைக்கிறது....
இவற்றுள் சில...
உண்மையுடன் இருந்தால்
உயர்வுகள் அதிலுண்டு....
போலிகள் பல்லிளித்தால்
கேலிகளே கிடைப்பதுண்டு...
இருபக்கம் இணையெனவே
இழுவிசை சேர்த்திழுக்கும்...
கயிறெனப் பிணைத்திருக்கும்
காலமெல்லாம் உறவுகளும்...
ஒருபக்கம் ஓய்வு கொண்டால்
மறுபக்கம் வீழ்ந்து விடும்....
ஒருதலையாய்க் காத்து நின்றால்
விடுதலையை மனம் நினைக்கும்...
வீழ்ந்தவர் எழுந்து நிற்க
விரிசல்கள் முளைத்திருக்கும்...
விரிசல்கள் வளர விட்டால்
உடைசல்கள் முகமுடைக்கும்....
உடைவதை அனுமதித்தால்
இடைவெளிகள் வளர்ந்து நிற்கும்...
உடைந்ததை ஒட்டி வைத்தால்
விரிசல்கள் முகம் சுழிக்கும்....
உள்ளமெனும் இல்லமது
மெல்ல மெல்ல சிதிலமாகும்....
கள்ளமிட்ட கோயிலென
களையிழந்து புதினமாகும்...
பார்ப்பவர் விருப்பத்திற்கு
பற்பல கதை பிறக்கும்...
கேட்பவர் செவிவழியே
கிளைக்கதையாய் அது பறக்கும்...
அடுத்தவர் விமர்சனங்கள்
ஆங்காங்கே வேர்பிடிக்கும்...
தொடுத்தவர் எண்ணங்கள்
தொடர்ந்தங்கு விருட்சமாகும்..
பிடித்தவரின் அன்பெல்லாம்
பிழையாகச் செல்லரிக்கும்...
முடிவினில் மொத்தமாக
முரண்பாட்டில் முற்றுபெறும்..
உடைந்து பிரிந்து விட்டால்
உருக்குலைக்கும் நினைவிருக்கும்...
உடையாமல் பார்த்துக்கொண்டால்
உள்ளத்தில் நிறைவிருக்கும்...
அன்பென்னும் நீர் ஊற்றி
அனுதினம் வளர்த்திடுவோம்...
அந்த ஆலமர நிழலினிலே
நம் ஆயுள்வரை மகிழ்ந்திடுவோம்...
#வாழ்த்துக்களுடன்....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்