காத்திருக்கும் காதல் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
அதிகாலைப் பனித்துளி,
அன்றாடம் விழித்திருக்கிறது...
ஆகாயச் சூரியனின் பொற்கதிருக்காக...
மாலை நேர முல்லை,
மலராமல் மொகிழ்ந்திருக்கிறது...
வெண்ணிலாவின் மேக உலா வருகைக்காக...
மண்ணில் புதைந்த விதை,
மனம் தளராமல் மௌனிக்கிறது...
மழைத்துளியின் ஸ்பரிசத்திற்காக...
கடற்கரை மணல் சிப்பி,
கண்மூடிக் கனவிலிருக்கிறது...
அலை தீண்டும் அணைப்புக்காக...
இயற்கையே இப்படித் தான் —
காத்திருக்கிறது காலங்காலமாய்...
தன் நியதியிலே...
இதயங்கள் மட்டும் என்ன செய்யும்?
அதே நியதிதானே அவற்றிற்கும்....
ஆம்...
இதயம் உறைந்த காதலும்
இப்படியே தொடர்கிறது...
காத்திருப்பாய் நீள்கிறது..
ஒரு வருகைக்காக...
ஒரு வார்த்தைக்காக.
ஒரு புன்னகைக்காக..
ஒரு ஸ்பரிசத்திற்காக...
ஒரு தீண்டலுக்காக...
ஒரு அணைப்பிற்காக...
முடிவிலா... காதலுடன்...
முழுமையாய்க் காத்திருக்கிறது...
காலமெல்லாம்...
கோதை காத்திருந்தாள்...
ரங்கனுக்காக...
திருவரங்கத் திருவீதி வழியே...
சூடிக்கொடுத்த சுடர்கொடியாய்,
அவன் தோள் சேரும் நாளையெண்ணி...
சீதை காத்திருந்தாள்...
ராமனுக்காக...
அசோகவனத்தின் ஆர்ப்பரிப்பில்...
பூமித்தாயின் புதல்வியாய்,
அவன் கரம் பிடிக்கும் கனவிலே...
ராதை காத்திருந்தாள்...
கண்ணனுக்காக...
பிருந்தாவன பிரளயத்தில்..
தென்றல் தீண்டும் புதுமலராய்,
அவன் தந்த காதல் நினைவிலே...
மாறியது கோலம்....
மாற்றியது காலம்.....
ஆனால்...
காத்திருப்பு மட்டும் மாறவில்லை...
காலங்காலமாய்...
அன்று போல...
இன்றும்...
தொடர்கிறது...
ஒரு வருகைக்காக..
ஒரு வார்த்தைக்காக.
ஒரு புன்னகைக்காக..
ஒரு ஸ்பரிசத்திற்காக...
ஒரு தீண்டலுக்காக...
ஒரு அணைப்பிற்காக...
முடிவிலா... காதலுடன்...
முழுமையாய்க் காத்திருக்கிறது....
காலமெல்லாம்....
வாழ்த்துக்களுடன்,
உங்கள்
கவிஞர் விஜயநேத்ரன்.